பலாத்காரம் செய்வோம், கொலை செய்வோம்: டிவி நடிகையை மிரட்டிய 5 பேர் கைது
டேராடூன்: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ரோஷினி வாலியா சென்ற காரை பின்தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்வோம், கொலை செய்வோம் என மிரட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராணா பிரதாப் இந்தி தொலைக்காட்சி தொடரில் மகாராணா பிரதாப்பின் முதல் மனைவியாக நடித்து பிரபலம் ஆனவர் ரோஷினி வாலியா(13). மும்பையில் வசித்து வரும் அவர் ஷூட்டிங்கிற்காக உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.
அங்கு வாலியா மற்றும் அவரது வயதை ஒத்து உள்ள சிறுவர், சிறுமியர் ஒரு காரில் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு காரில் இருந்தவர்கள் வாலியாவின் காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். மேலும் வாலியாவை பார்த்து உன்னை பலாத்காரம் செய்வோம், கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும் அவரை திட்டி அசிங்கமாக பேசியுள்ளனர்.
இதனால் பயந்துபோன வாலியா தனது செல்போனில் போலீசாருக்கு போன் செய்தார். ஆனால் போலீசார் வாலியா சிறுமி என்பதால் அவதரது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வாலியா நேராக காவல் நிலையத்திற்கு சென்று தான் யார் என்பதை கூறிய பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் வாலியாவை கிண்டல் செய்து மிரட்டிய நபர்களை போலீசார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.