லஞ்ச விவகாரத்தில் சிக்கினார் சந்திரபாபு நாயுடு.. ஆடியோ வெளியிட்டது தெலுங்கு டிவி சேனல்!
ஹைதராபாத்: தெலுங்கானா மேலவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போடுவதற்காக எம்.எல்.ஏ ஒருவருக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்புள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்த உரையாடல் அடங்கிய ஆடியோ, தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் நேற்று ஒலிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் 6 மேலவை உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த வாரம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கி இருந்தன.
கட்சி மாற்றி வாக்கு
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கொடங்கல் தொகுதி தெலுங்கு தேச கட்சி (ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கட்சி) எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி என்பவர் தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்எல்ஏ ஸ்டீபன்சனை அணுகி, தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்கும்படியும், அவ்வாறு வாக்களித்தால் ரூ.5 கோடி தருவதாகவும் கூறியுள்ளார்.
பதுங்கியிருந்தனர்
இது தொடர்பாக ஸ்டீபன்சன், கடந்த வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஸ்டீபன்சன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மறைந்திருந்தனர். அந்த வீட்டில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி இருந்தனர்.
கையும் களவுமாக கைது
எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஸ்டீபன்சன் வீட்டுக்கு வந்தார். அங்கு, மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க முன்பணமாக ரூ. 50 லட்சத்தை ஸ்டீபன்சனிடம் வழங்கினார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரேவந்த் ரெட்டி உட்பட 4 பேரை கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
சந்திரபாபு நாயுடு ஆடியோ
இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக தெலுங்கு நியூஸ் சேனலான 'டி நியூஸ்' ஒரு ஆடியோ உரையாடலை வெளியிட்டு ஆந்திராவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், சாட்சாத் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்டீபன்சனிடம் பேசும் பதிவு இருந்தது. "எனது கட்சிக்காரர் சொல்வதை செய்தால் தக்க வெகுமதி உண்டு. எந்த வித பயமும் இல்லாமல் நீங்கள் உங்கள் முடிவை எடுக்கலாம்" என்று சந்திரபாபு நாயுடு அந்த உரையாடலின்போது பேசுவதை போல ஆடியோவில் ஒலி பதிவாகியுள்ளது.
அதிர்ச்சி
இந்த உரையாடல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த லஞ்ச விவகாரத்தில் ஆந்திர முதல்வருக்கே நேரடியாக தொடர்பிருப்பது ஆடியோ பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது. தெலுங்கானா உள்துறை அமைச்சர் நாயினி நரசிம்ம ரெட்டி இரு தினங்கள் முன்பு அளித்த பேட்டியின்போது, லஞ்ச விவகாரத்தில் சந்திராபாபு நாயுடுவுக்கு தொடர்புள்ளது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். எனவே தெலுங்கானா அரசு தரப்புதான், இந்த ஆடியோவை லீக் செய்திருக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு வட்டாரத்தில் கூறுகின்றனர்.