மேகாலாயாவிலிருந்து அசாம் மாநிலத்தவர் வெளியேற்றம் என பரவிய டிவி செய்தியால் பதட்டம்
ஷில்லாங்: மேகாலாயாவிலிருந்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவதாக அசாமைச் சேர்ந்த டிவி ஒன்று தவறான செய்தியை வெளியிட்டதால் இரு மாநிலங்களிலும் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது.
இந்த தவறான செய்தியினை அடுத்து அவ்விரு மாநிலங்களிலும் நேற்று பதற்றம் ஏற்பட்டது. எனினும், அவ்வாறு எவ்வித செயலும் நடக்கவில்லை என்பது தெரிய வந்ததால் பதட்டம் அடங்கியது.
மேகாலயாவின் ஷில்லாங் பகுதியில், மத்திய அரசு நிறுவனம் ஒன்றின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநில தொழிலாளர்கள் நான்கு பேர், சரியான அடையாள அட்டையை வைத்திருக்காததால், வெளியேற்றப்பட்டனர்.
அதை வைத்து மேகாலயாவில் இருந்து அசாம் மாநிலத்தவர் வெளியேற்றப்பட்டனர் எனச் செய்தி வெளியிட்டு விட்டது அந்த அசாம் டிவி. இதனால்தான் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இந்த டிவியின் பொறுப்பற்ற இந்த செய்திக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.