தொலைக்காட்சி உரிமத்தை ஆண்டு தோறும் புதுப்புக்கத் தேவையில்லை - வெங்கையா நாயுடு
பணம் மாற்றுவதில் மக்கள் படும் சிரமங்களை மட்டும் தொலைக்காட்சிகளில் காட்டுவது நல்லதல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் நடந்த பொருளாதார தொகுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய அவர், கருப்பு பணம் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை உறுதியாகவும், தைரியமாகவும் எடுத்துள்ளார்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அமல்படுத்துவது பற்றி நீண்ட நாட்களாக நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அதனை தொடர்ந்து கருப்பு பணம் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கறுப்பு பணத்தை தவிர பேருந்துகள், மெட்ரோ போன்ற அனைத்து போக்குவரத்து வசதிகளும் வழக்கம்போல இயங்கி வருகிறது. கருப்புப் பணத்தைத் தவிர எந்த போக்குவரத்து சேவைகளும் முடங்கவில்லை என்றார்.
இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை. ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை தடை செய்தது திடீரென வந்த அறிவிப்பாகவும், நடவடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் நீண்ட நாளைய செயல் திட்டம் அதற்கு பின் உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை சில சுயநலம் மிக்கவர்கள் தவிர மற்ற அனைவரும் பாராட்டி உள்ளனர் என்று கூறினார்.
தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் படும் சிரமங்களை டிவி சேனல்கள் ஒளிபரப்புவதில் தவறில்லை. அதே சமயம் அந்த சிரமங்களை மட்டும் காட்டுவது நல்லதல்ல. இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஆண்டுதோறும் தங்களின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்துள்ளோம். மாநில தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.