ஜிஎஸ்டி பற்றி கமல்ஹாசன் கருத்தா... அதெல்லாம் எடுபடாது - அருண்ஜெட்லி 'அசால்ட்'
ஜிஎஸ்டி பற்றி கமல்ஹாசன் கருத்தெல்லாம் இங்கே எடுபடாது என்று பளிச்சென கூறியுள்ளார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி.
டெல்லி: ஜிஎஸ்டி குறித்தான கமல்ஹாசன் கருத்தெல்லாம் இங்கே எடுபடாது, அவரின் பிரச்சாரங்கள் கொஞ்சமும் பயனளிக்காது என்று அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த வரியை குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த பிரச்சினை குறித்து சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் கடந்த 2ம் தேதி திரைத்துறையினரின் ஆலோசனை நடைபெற்றது. அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், " சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதை தமிழ் சினிமா உலகம் எதிர்க்கிறது. மாநில மொழி படங்களுக்கு வரியைக் குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்.
வரிச்சுமையை தாக்குப்பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். அதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க்கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆங்கில மீடியா ஒன்றுக்கு மத்திய அமைச்சர் பேசிய அருண் ஜெட்லி இன்று பேட்டியளித்துள்ளார். அதில் கமல்ஹாசன் கருத்துக்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அவர் பதிலளிக்கையில், ' அரசுக்கு அழுத்தம் கொடுக்க மீடியாவை பயன்படுத்துவதால் எந்தஒரு மாற்றமும் ஏற்படபோவது கிடையாது. இது தொடர்பாக ஒவ்வொரு துறையை சேர்ந்த பிரதிநிதிகளையும் நாங்கள் பார்ப்போம். அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த மீடியாவை பயன்படுத்தினால் அது பலனளிக்காது. அழுத்ததால் எங்களை எதுவும் செய்யமுடியாது' என்று கூறியுள்ளார்.