7 கோடி கணக்குகளின் கதை முடிந்தது.. பொய்யான கணக்குகளை முடக்கும் டிவிட்டர்.. காரணம் என்ன?
டிவிட்டரில் இருக்கும் பொய்யான 7 கோடி கணக்குகள் கடந்த இரண்டு மாதத்தில் முடக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: டிவிட்டரில் இருக்கும் பொய்யான 7 கோடி கணக்குகள் கடந்த இரண்டு மாதத்தில் முடக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் நிறைய பொய்யான ஐடிக்களை முடக்கும் பணி நடந்து வருகிறது.
தவறான தகவல்கள், பொய்யான தகவல்கள் இணையத்தில் பரவுவதுதான் இப்போது மிகப்பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. ஒரே ஒரு பொய்யான வாட்ஸ் ஆப் மெசேஜால் இந்தியாவில் மட்டும் 30 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பேஸ்புக்கும் பொய்யான தகவல்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் இதில் டிவிட்டர் மட்டும் கொஞ்சம் அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கணக்கு பொய்யா
ஆனால் டிவிட்டர் இதில் பெரிய நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டது. 2 மாதங்களுக்கு முன்பே டிவிட்டர் இந்த நடவடிக்கையை எடுக்க தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக, பொய்யான கணக்குகளை தேடி,தேடி நீக்கி வருகிறது. திடீர் என்று ஒரு கணக்கில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, ஒரு கணக்கு பொய்யான கணக்கா என்று கண்டுபிடித்து வருகிறார்கள்.
சிறந்த உதாரணம்
அதேபோல் சில பிரபலங்களுக்கும் அதிக பொய்யான பாலோவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக பிரதமர் மோடிக்கு 4,03,00,000 பேரில் 2,41,80,000 பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். உலகிலேயே சதவிகிதப்படி மோடிதான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவருக்கு மொத்தம் 60 சதவிகிதம் பேர் பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.
எவ்வளவு பொய்யான கணக்கு
மொத்தம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 7 கோடி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தினமும் 10 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவிலும் மிகவும் அதிக அளவில், கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இன்னும் அதிக அளவில் கணக்குகள் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மிகவும் அதிக அளவில் குறையும்
இதனால் சிலருக்கு டிவிட்டரில் பாலோயர்கள் எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் குறையும் என்று கூறப்படுகிறது. சிலருக்கு சராசரியாக 4ல் இருந்து 5 பின்தொடர்பாளர்கள் குறைவார்கள் என்று டிவிட்டர் விளக்கம் அளித்துள்ளது. டிவிட்டர் நிறுவனம் இந்த தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.