பெங்களூரில் அலுவலக கிளையை மூடிய டிவிட்டர் நிறுவனம்.. காவிரி கலவரம் காரணமா? #bengaluru
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வந்த பிரபல சோஷியல் நெட்வொர்க் நிறுவனமான டிவிட்டர் மேம்பாட்டு மையம் மூடப்படுகிறது. இதனால் சுமார் 120 இன்ஜினியரிங் ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் பெங்களூரை சேர்ந்த ஜிப்டயல் மொபைல் சொலுயூசன் என்ற நிறுவனத்தை சுமார் ரூ.247 கோடிக்கு கடந்த வருடம் வாங்கியது. இதையடுத்து பெங்களூரில் மேம்பாட்டு மையத்தை டிவிட்டர் தொடங்கியது. இங்கு இன்ஜினியரிங் படித்த பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், திடீரென, இந்த மேம்பாட்டு மையத்தை மூடப்போகிறது டிவிட்டர். இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், வழக்கமான பணி ஆய்வு முடிவுப்படி, பெங்களூரில் செயல்பட்டு வந்த குளோபல் இன்ஜினியரிங் பணிகளை நிறுத்த உள்ளோம். ஒவ்வொருவரின் பங்களிப்புக்கும் நன்றி சொல்கிறோம். நிறுவனத்தில் பணியாற்றியோர் கவுரவமாகவே வெளியேற்றப்படுவார்கள். இந்தியா வேகமாக வளரும் மார்க்கெட். எங்களது முக்கிய பார்ட்னராக இந்தியா தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக் போன்ற போட்டி நிறுவனங்களின் வேகத்துக்கு டிவிட்டரால் ஈடுகொடுக்க முடியாததால் அதன் லாபம் குறைந்தது இந்த முடிவுக்கான காரணமாக கூறப்படுகிறது. பெங்களூரில் நடைபெற்ற கலவரங்களும் டிவிட்டரின் முடிவுக்கு காரணம் என 'டெக்' வட்டாரம் முனுமுனுக்கிறது.