நீ முன்னாடி போனால்... நான் பின்னாடி வாரேன்.. மாணவிகளை பின் தொடர்ந்த இருவர் கைது
பனாஜி: கோவாவில் மாணவிகளைப் பின் தொடர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளிக்குச் செல்லும் வழியில் மூன்று மாணவிகளை பின்தொடர்ந்து, தொல்லை கொடுத்ததாக, புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து, சி.சி.டி.வி காட்சிகளை அய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரசாத் (22) மற்றும் ஆனந்த் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவதாக குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் தலைமறைவாக உள்ளார்.
திஸ்வாடி தாலுகாவில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. புதன் கிழமை வழக்கம் போல், மாணவிகள் பள்ளிக்கு புறப்பட்டனர். அப்போது, ஆக்டிவா ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து வந்த மூன்று பேர், மாணவிகளிடம் (மைனர் சிறுமிகள்), குறும்பாக பேசியுள்ளனர். தங்களுடன் பேசும் படியும் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள், அங்கிருந்து பள்ளிக்கு ஓடி வந்து விட்டனர்.
இதனை அறிந்த தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட, பழைய கோவா போலீசார் உடனடியாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 345 டி மற்றும் 24 மற்றும் கோவா குழந்தைகள் சட்டம் 2003 இன் பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக தனிப்படை அமைத்து, மாணவிகளை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படும் பாதையில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிவ்பா டால்வி கூறியுள்ளார்.