'ப்ளைட்' டாய்லெட்டில் 'தம்' அடித்த இருவர் கைது! வார்னிங் சிஸ்டத்தை செக் செய்ததாக பல்டி!!
டெல்லி: ஓடும் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை கருவிகள் சரியாக வேலை செய்கிறதா என பரிசோதிக்கவே புகைபிடித்ததாக இருவரும் கூறியுள்ளனர்.
மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் உண்டு.. விமானத்தில் ஏறும்போது கூட தீப்பெட்டியுடன்தான் சென்றேன். ஆனால் அமைச்சராவதற்கு முன்பு வரை அதை அனுமதிக்கமாட்டார்கள். தற்போது என்னை யாரும் தடுப்பதில்லை.. வழக்கம்போல லைட்டர் அல்லது தீப்பெட்டியுடன் செல்கிறேன் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
தற்போது பயணிகள் இருவர் ஓடும் விமானத்தில் புகைபிடித்து சிக்கியிருக்கின்றனர். அஸ்ஸாமின் குவஹாத்தியில் இருந்து ஏப்ரல் 8-ந் தேதியன்று டெல்லி வந்த விமானத்தில் வினய்குமார் (வயது 29), அபிலாஷ் சுனில் (வயது 26) ஆகிய இரு இளைஞர்கள் பயணித்துள்ளனர். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் சோதனைகளின் போது இருவரும் எப்படியோ தீப்பெட்டியை மறைத்துவிட்டனர்.
பின்னர் விமானம் பறந்து கொண்டிருந்த போது இருவரும் கழிவறைக்கு சென்று சிகரெட்டை பற்ற வைத்துள்ளனர். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் இருவரையும் தடுத்து வைத்தனர்.
பின்னர் இருவர் குறித்தும் டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தில் தீ விபத்து குறித்த எச்சரிக்கை கருவிகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை பரிசோதிக்கவே புகைபிடித்ததாக இருவரும் கூறியுள்ளனர். ஆனால் இதை நிராகரித்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
முதல் முறையாக விமானத்தில் புகைபிடித்த காரணத்துக்காக டெல்லி போலீசார் இருவரையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் ரூ1 லட்சம் அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் டெல்லி விமான நிலைய அதிகாரிகள்.
ஏன் இந்த வேண்டாத வேலை?