இருப்பது 400 பேரு.. வெறும் 2 டாய்லெட்தானா.. குடிசைப் பகுதிக்கு வந்து ஷாக் ஆன மமதா பானர்ஜி!
கொல்கத்தா: முதல்வன் பட அர்ஜுன் போல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி நேற்று திடீரென ஹவுராவில் உள்ள குடிசைப்பகுதிகளுக்கு சென்று அந்த மக்களின் குறைகளை கேட்டார். அப்போது 400 பேருக்கு இரண்டு கழிவறை தானா என அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மம்தா பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக கடிந்து கொண்டார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரும் 2021ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் வியூக கில்லாடி என போற்றப்படும் பிரசாத் கிஷோரின் உதவியை நாடியுள்ளார்.
இதன்படி கிஷோரின் ஐபிஏசி நிறுவனம் மேற்கு வங்கத்தில் எங்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் நிலவுகிறது. மம்தாவுக்கு அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த விஷயங்களில் மக்களிடம் எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வடிவமைத்து கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
குடிசைப்பகுதியில் மம்தா
இந்நிலையில் கிஷோர் வருகையின் தாக்கமா அல்லது 'திதியிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள், உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்" என்ற மம்தாவின் திட்டத்தின் ஒரு பகுதியா என்று தெரியவில்லை. நேற்று திடீரென கொல்கத்தாவின் ஹவுராவில் உள்ள குடிசைகள் நிறைந்த பகுதிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் படை சூழ சென்றார்.
முதல்வன் பட பாணியில் கோபம்
அங்கு முதல்வர் பட அர்ஜுன் பாணியில் சேரிப்பகுதிக்கு நடந்து சென்ற மம்தா, பூரணாம்பஸ்தி என்ற 29வது வார்டில் அப்படியே மக்களிடம் குறைகளை கேட்டார். அங்குள்ள 400 மக்களுக்கு வெறும் இரண்டு டாய்லட் தான் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தார்கள். இதனை கேட்டு கோபம் அடைந்த மம்தா , உடனே நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். அதன் பிறகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பிர்காத் ஹக்கிமிடம் பேசிய மம்தா, நான் செல்லும் வழியில் பாஸ்தி பகுதியை பார்வையிட்டேன்.400 பேருக்கு எப்படி 2 டாய்லட் மற்றும் பாத்ரூம் போதும்? ஏன் சேரி வளர்ச்சிக்கு நாம் நிதியை பயன்படுத்தவில்லை. யார் இங்கு கவுன்சிலர், அவர் என்ன பன்றாரு? என கோபமாக ஹக்கிடம் கேட்டார்.
ஜெயிலுக்கு போய்விட்டார்
அப்போது அனைவரும் அமைதியாக இருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் இந்த ஏரியா திரிணாமுல் கவுன்சிலர் கொலை வழக்கில் கடந்த 2007ம் ஆண்டு சிறைக்கு போய்விட்டார் என்றார். இதை கேட்டு இன்னும் கோபமடைந்த மம்தா, கவுன்சிலர் ஜெயிலுக்கு போய்டடா நகராட்சி இருக்குல்ல. அதை நிர்வாகம் பன்றவங்க என்ன பன்றாங்க. ஏன் இந்தவார்டில் இப்படி இருக்கு? இன்னும் 7 நாளில் உங்கள் மேற்பார்வையில் இந்த வார்டில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என அமைச்சர் ஹக்கிடம் சொன்னார்.
உங்க வீடு இப்படி இருந்தா
இங்கு வசிக்கும் 400பேருக்கு குறைந்த பட்சம் 6 அல்லது 8 கழிவறையும், குளியலறையும் இருக்கவேண்டாமா? எப்படி 400பேருக்கு இரண்டு பாத்ரூம் போதும் என்று நினைக்கிறீங்க, உங்களால கற்பனை பண்ணி பார்க்க முடியுதா? இந்த மாதிரி சூழ்நிலை உங்க வீட்டில் இருந்த ஏற்றுக்கொள்வீர்களா உடனே வேலையை ஆரம்பியுங்கள் எனறு மம்தா கோபமாக சொல்லிவிட்டு புறப்பட்டார்.
குறைகளை கேட்கிறார் மம்தா
மம்தா பானர்ஜி அடுத்ததாக கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள திஹா என்ற பகுதிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இது கொல்கத்தாவில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. திஹாவில் வசிக்கும் மீனவர்களை சந்தித்து அவர்களை குறைகளை கேட்டறிவதுடன், அவர்கள் குழந்தைகளை படிக்க வைக்கவும் வளர்க்கவும் படும் சிரமங்களை கேட்டு அதற்கான தீர்வை அளிக்கப்போகிறாராம்.
வாட்ஸ் ஆப்பில் வீடியோ
மம்தா பானர்ஜியின் இந்த பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கும் விடியோக்கள், புகைப்படங்கள உடனுக்குடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாட்ஸ்அப் குரூப் மூலம் பரப்பப்படுவதன் மூலம் மீடியாக்களுக்கும் அனுப்படுகிறது. பிரசாத் கிஷோரின் திட்டப்படி மம்தா பானர்ஜி செயல்படுவதாக சொல்கிறார்கள்.