கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்... பந்தை எடுக்க முயன்ற 2 பேர் நீரில் மூழ்கி பலி
மும்பை: மும்பையில், கடலோர கழிமுக பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீரில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 2 சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
மும்பை வெர்சோவா பகுதி சிவ்கல்லி தெருவை சேர்ந்த சிறுவர்கள் சிலர் நேற்று மாலை அவர்களது வீட்டிற்கு அருகிலிருந்த கடலோர கழிமுக பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கடல் நீருக்குள் பந்து சென்று விட்டது.
அப்பந்தை எடுப்பதற்காக ராஜன் பாஞ்சி ஆப்டே(13) மற்றும் நயன் மனோஜ் தாக்ரே(12) என்ற இரண்டு சிறுவர்கள் கடல் நீரில் இறங்கியுள்ளனர். பந்து ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், பந்தை தொடர்ந்து அவர்களும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். சரிவர நீச்சல் தெரியாத சிறுவர்கள் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டதும் அபயக் குரல் எழுப்பியுள்ளனர்.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் சிறுவர்களை மீட்க போராடியுள்ளனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினரும் சிறுவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால்,சிறுவர்களை காப்பாற்ற இயலவில்லை.
கடற்கரைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.