கொரோனாவால் மூடப்பட்ட பள்ளி.. வகுப்பறைக்குள் கேட்ட விநோத சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் உள்ள ஒரு பள்ளி வகுப்பறையில் இரண்டு நாகப்பாம்புகள் பிடிபட்டன.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் உள்ள ஒரு பள்ளி வகுப்பறையில் இரண்டு நாகப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தேசமே தற்போது ஊரடங்கில் இருப்பதால், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்தால் மட்டுமே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் நேற்று மாலை சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வகுப்பறையில் ஏதோ விநோதமான சத்தம் கேட்டிருக்கிறது. சிறுவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, இரண்டு பாம்புகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
இதையடுத்து அந்த சிறுவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள பெரியவர்கள் மூலம் சுற்றுச்சூழல் தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த பள்ளிக்கு வந்து, அந்த இரண்டு பாம்புகளையும் லாவகமாக பிடித்து பையில் அடைத்தனர். பிடிப்பட்ட பாம்புகள் இரண்டும், அதிக விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்புகள் என்பது தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களாக பள்ளி மூடிக்கிடந்ததால் அருகில் உள்ள புதரில் இருந்து பாம்புகள் வகுப்புறைக்குள் வந்திருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். பிடிப்பட்ட பாம்புகள் இரண்டையும் வனத்துறையினர் தொலைதூரத்தில் உள்ள காட்டுக்குள் கொண்டுசென்று விட்டுவிட்டனர். பள்ளி வகுப்பறைக்குள் பாம்புகள் இருந்த சம்பவம் ஜல்பைகுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.