சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்.. இரு ரிசர்வ் போலீஸ்காரர்கள் படுகாயம்
சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
ராய்பூர்: சத்தீஷ்கர் வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நக்சலைட்டுகள் வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
சத்தீஷ்கர் வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74வது பிரிவினர் சிட்டால்நர் காவல்நிலையம் அருகே சாலையை திறக்கும் பணிக்கு சென்றனர். இதற்காக அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சிட்டால்நர் நரசபுரம் கிராமங்களுக்கு இடையே வீரர்கள் சென்றபோது நக்சலைட்டுகள் வைத்திருந்த வெடிகுண்டை கவனக்குறைவால் மிதித்தனர்.
இதில் தலைமைக் காவலர் பார்விந்தர் மற்றும் காவலர் பி.சாகர் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த மற்ற வீரர்கள் இருவரையும் வனப்பகுதியில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீரர்கள் கவனக்குறைவாக நக்சலைட்டுகள் வைத்திருந்த வெடிகுண்டுகளை மிதித்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.