மீன்பிடி படகில் சரக்கு கப்பல் மோதல்.. 2 பேர் பலி.. கேரளாவில் சோகம்
கேரள மாநில மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் படகு மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் 2 மீனவர்கள் பரிதாபமாகப் பலியாயினர்.
கொச்சி: கேரளாவில் மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில், 2 மீனவர்கள் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
அங்குள்ள கொச்சி துறைமுகத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இங்கு வந்த பனாமா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, துறைமுகத்தில் இருந்து வெளியேறும்போது, எதிர்பாராதவிதமாக, அங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில், மீனவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்திற்குக் காரணமான, அந்த சரக்கு கப்பல் உடனடியாக மாயமாகிவிட்டது. அதனை இந்திய கடலோர படையினர் உதவியுடன் கேரள போலீசார் தேடி, பறிமுதல் செய்துள்ளனர்.
சரக்குக் கப்பலின் கேப்டன், ஊழியர்கள் அனைவரையும் போலீசார் தங்களது பிடிக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் கொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மொத்தம் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
இது கேரள கடல்பரப்பில் நடைபெறும் 2வது மோதல் சம்பவமாகும். ஏற்கனவே, 2012ம் ஆண்டு இத்தாலி கடற்படையினர், கேரள மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றதும் குறிப்பிடத்தக்கது.