கரைபுரண்டோடும் காவிரி வெள்ளம்.. செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி
கரைபுரண்டோடும் காவிரியாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பெங்களூரு: கரைபுரண்டோடும் காவிரியாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் இரு அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கரைபுரளும் வெள்ளம்
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ககனசுக்கி, பரசுக்கி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல் ராமநகர் மாவட்டம் மேகதாதுவில் மலைமுகடுகளில் காவிரி ஆற்று நீர் பாய்ந்தோடி வருகிறது.
செல்பி எடுத்து கொண்டாட்டம்
இதை பார்க்க கடந்த சில நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். மேலும் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தை செல்போனில் படம் பிடித்தும் செல்பி எடுத்தும் மகிழ்கிறார்கள்.
காவிரியில் செல்பி
இந்நிலையில் பீதர் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான இரண்டு என்ஜினீயர்கள் சமீர் ரகுமான் மற்றும் பவானி சங்கர் வெள்ளப்பெருக்கை காண சென்றனர். மேகதாதுவில் ஒரு பாறை மீது ஏறி நின்று சமீர் ரகுமான் காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து செல்லும் காட்சியுடன் செல்பி எடுத்துள்ளார்.
காப்பாற்ற முயன்ற நண்பர்
அப்போது கால் தவறி சமீர் ரகுமான் காவிரி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த நண்பர் பவானிசங்கர் ஆற்றில் குதித்து, சமீர் ரகுமானை காப்பாற்ற முயன்றுள்ளார்.
அடித்து செல்லப்பட்ட நண்பர்கள்
ஆனால் காவிரி ஆற்றில் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரைபுரண்டோடும் வெள்ளத்தில் 2 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
போலீஸ் எச்சரிக்கை
அவர்கள் 2 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது உடல்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மேகதாது காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் செல்பி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.