விகாஸ் துபே கூட்டாளி குட்டன்- சாலை மார்க்கமாக மகாராஷ்டிராவில் இருந்து உபிக்கு கொண்டு செல்லும் போலீஸ்
தானே: உத்தரப்பிரதேசத்தில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளி குட்டன் ராம்விலாஸ் திரிவேதியை மகாராஷ்டிராவில் இருந்து சாலை மார்க்கமாக விசாரணைக்காக உத்தரப்பிரதேச போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தை கதிகலங்க வைத்தவர் ரவுடி விகாஸ் துபே. இவரை கைது செய்ய சென்ற 8 போலீசா சுட்டுக் கொல்லப்பட்டனர்.
8 போலீசாரை ரவுடி என்கவுண்ட்டர் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து விகாஸ் துபேவின் கூட்டாளிகள் வேட்டையாடப்பட்டனர். அவரது கூட்டாளிகள் இருவர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விகாஸ் துபேவின் உதவியாளர் குட்டன் திரிவேதி கைது.. அகிலேஷுக்கு நெருக்கமானவரா குட்டன்?
ம.பி.யில் விகாஸ் துபே கைது
இந்த நிலையில் மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் காளி கோவிலில் விகாஸ் துபே பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். அவர் உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் கான்பூர் அருகே போலீசார் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
என்கவுண்ட்டரில் விகாஸ் துபே பலி
இதனை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிக்க முயற்சித்தார். போலீசாரின் துப்பாக்கியை பறித்து போலீசார் மீது துப்பாக்குச் சூடு நடத்தினார் விகாஸ் துபே. இதனையடுத்து போலீசார் பதிலுக்கு சுட்டதில் விகாஸ் துபே உயிரிழந்தார். விகாஸ் துபே, என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் கைது
இதனிடையே விகாஸ் துபேவின் கூட்டாளிகளான அரவிந்த் என்ற குட்டன் ராம்விலாஸ் திரிவேதி, சோனு சுரேஷ் திவாரி ஆகியோர் மகாராஷ்டிரா மாநில தானேவில் பதுங்கி இருந்தனர். இவர்கள் இருவருக்கும் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் நேரடி தொடர்பு இருந்தது. இந்த இருவரையும் மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.
உ.பி.க்கு சாலை மார்க்கமாக பயணம்
இவர்கள் 2 பேரையும் விசாரணைக்காக உத்தரப்பிரதேசத்துக்கு அம்மாநில போலீசார் அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால் தங்களையும் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என அஞ்சிய 2 ரவுடிகளும் விமானத்தில்தான் அழைத்து செல்ல வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து குட்டன் மற்றும் சோனு இருவரும் சாலை மார்க்கமாக்க உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.