குஜராத்தில் யோகா நிகழ்ச்சிக்கு செல்கையில் கார் மோதி 2 பள்ளி மாணவிகள் பலி
ராஜ்கோட்: குஜராத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பள்ளிக்கு செல்லும் வழியில் 2 மாணவிகள் கார் மோதி பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கோண்டலில் இருக்கும் வித்யா மந்திர் பள்ளியில் படித்து வந்தவர்கள் அவானி மன்சுக் பவாரியா மற்றும் ஆர்த்தி ஜகதீஷ் சொலான்கி. அவர்கள் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று காலை 6.30 மணிக்கு பள்ளிக்கு கிளம்பினர்.
ஜாம்வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக அவர்கள் பிற மாணவிகளுடன் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது கோண்டலில் இருந்து வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் மீது மோதியது. இதில் அவானி, ஆர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஷ்ரத்தா மக்வானா, ஜாஸ்மின் சர்வையா மற்றும் ஜல்பா மக்வானா ஆகியோர் காயம் அடைந்தனர்.
அந்த கார் மாணவிகள் மீது மோதி பேருந்து நிலைய சுவர் மீது மோதி நின்றது. இதில் கார் டிரைவர் படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்தார். அவர் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயம் அடைந்த மாணவிகள் கோண்டலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். மற்ற 2 மாணவிகள் நிலைமை மோசமாக இருந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஜ்கோட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் கூறுகையில், அதிகாலை நேரம் என்பதால் டிரைவர் தூக்கத்தில் வாகனத்தை ஓட்டி கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றனர்.