வழக்குகளை சந்திக்கலாம் வா! தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா!
தெலுங்கானாவில் ஆணவ கொலையால் கணவர் பிரணாய் குமாரை இழந்து இருக்கும் அம்ருதவர்ஷினியை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கவுசல்யா
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஆணவ கொலையால் கணவர் பிரணாய் குமாரை இழந்து இருக்கும் அம்ருதவர்ஷினியை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கவுசல்யா.
தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமாரும், அம்ருதவர்ஷினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் இதற்கு பெரிய எதிர்ப்பு எழுந்தது. அம்ருதவர்ஷினி ''ஓசி'' வகுப்பை சேர்ந்தவர், பிரணாய் குமார் பட்டியலின சாதியை சேர்ந்தவர்.
இந்த நிலையில் கடந்த வாரம் அம்ருதா பிரணாய் ஜோடியை பின்தொடர்ந்து வந்த சுபாஷ் சர்மா என்ற கூலிப்படை கொலையாளி, பிரணாயை பின்னிருந்து தாக்கி, கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். அம்ருதாவின் அப்பா மாருதி ராவ்தான் இந்த கொலையின் முக்கிய குற்றவாளி.
இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இந்த குற்றவாளிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கு முன்பே
தமிழகத்தில் கவுசல்யாவின் கணவர் சங்கர் உடுமலைபேட்டையில் கொலை செய்யப்பட்டதை போலவே இந்த கொலையும் நடந்து இருக்கிறது. மார்ச் 13, 2016ல் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். நடுசாலையில் மக்கள் முன்னிலையில் இவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டு ஆட்கள் மூலம் இந்த கொலை அரங்கேற்றப்பட்டது.
வீட்டில் சென்று சந்தித்தார்
இந்த நிலையில் தற்போது கவுசல்யா தெலுங்கானா சென்று அம்ருதாவை சந்தித்து உள்ளார். அம்ருதா தற்போது அவரது கணவர் பிரணாய் குமார் வீட்டில் தங்கி உள்ளார். அவரது வீட்டிற்கே சென்று கவுசல்யா அம்ருதாவை சந்தித்தார். கவுசல்யாவுடன் சில அமைப்புகளை சேர்ந்தவர்களும், அவரது வக்கீலும் உடன் இருந்தனர்.
வீடியோவை காண்பித்தார்
அம்ருதாவை சந்தித்த கவுசல்யா, சங்கர் படுகொலை குறித்து விளக்கினார். மேலும் சங்கர் கொலை செய்யப்பட்ட வீடியோவையும் காட்டினார். இரண்டு பேருடைய காதல் கதையும், முடிவும், போராட்டமும் கிட்டத்தட்ட ஒன்று போல இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பெண்ணுக்கு ஆறுதலாக கவுசல்யா பேசி இருக்கிறார்.
ஆலோசனை வழங்கினார்
மேலும் வழக்கறிஞர்கள் அவருக்கு இந்த வழக்கில் எப்படி போராட வேண்டும் என்று கூறி உள்ளனர். வழக்கு விசாரணையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்து இருக்கிறார்கள். வழக்குகளை சந்திக்கலாம் வா என்று ஆறுதல் அளித்துள்ளனர். கவுசல்யா கணவர் சங்கர் கொலை வழக்கில் 8 பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.