மிலனில் இந்திய தூதரகத்தின் செயலால் பரிதவித்த 2 இந்திய பெண்கள்
பெங்களூர்: இத்தாலியின் மிலன் நகரில் நடந்த உலக வர்த்தக கண்காட்சியில் ஆசியா சார்பில் பங்கேற்ற 2 இந்திய பெண்கள் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தொலைத்துவிட்டு இந்திய தூதரகத்தின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று நியூஸ்மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாலியின் மிலன் நகரில் கடந்த மாதம் 23ம் தேதி உலக வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் ஆசியா சார்பில் கர்நாடகாவைச் சேர்ந்த மல்லம்மா எலாவர் மற்றும் அவரின் மகள் தேஜஸ்வினி எலாவர் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் அவர்களின் பாஸ்போர்ட்டுகள், பணம், ஏடிஎம் கார்டுகள் இருந்த பை திருடுபோனது.
இதையடுத்து செய்வதறியாது விழித்த அவர்கள் மிலனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி உதவுமாறு கேட்டுள்ளனர். ஆனால் தூதரக அதிகாரிகளோ தற்காலிக பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனில் ரூ.22 ஆயிரம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த இருவரும் கண்காட்சிக்கு வந்தவர்களிடம் தங்களின் நிலைமை குறித்து தெரிவித்து பணம் பெற்று தற்காலிக பாஸ்போர்ட் வாங்கியுள்ளனர்.
இது குறித்து தேஜஸ்வினியின் தந்தை சிவானந்த் எலாவர் கூறுகையில்,
டீ குடிப்பதற்கு கூட பணம் இல்லாமல் நின்ற என் மனைவி, மகளிடம் ரூ.22 ஆயிரம் கேட்டுள்ளனர் தூதரக அதிகாரிகள். சொந்த மக்களுக்கே இந்திய தூதரகம் உதவவில்லை எனில் என்ன செய்வது. நான் அவர்களுக்கு நாடு திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை எடுத்து அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.
இந்த தகவலை நியூஸ்மினிட் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.