திகார் சிறையில் எலி போல சுரங்கம் தோண்டி தப்பிய பலே கைதிகள்… ஒருவன் சிக்கினான்
டெல்லி: நாங்க எல்லாம் திகார்லயே சுரங்கம் தோண்டி தப்பிச்சவங்க என்று மார்தட்டி கொள்கின்றனர் இரண்டு திருடர்கள். இதில் ஒருவனை மடக்கிப் பிடித்த போலீசார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய சிறை திகார் சிறைதான். இந்த சிறையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சாதாரண பிக்பாக்கெட் திருடனில் இருந்து கோடிக் கணக்கில் கொள்ளையடித்த ஊழல் அரசியல்வாதிகள் வரை அனைத்துத் தரப்பு கைதிகளும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திகார் சிறையில் உள்ள ஒரு செக்டாரின் 7ம் நம்பர் அறையில் பைசன், ஜாவித் என்ற இரண்டு கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். கொள்ளை வழக்கு ஒன்றில் கைதாகி அவர்கள் ஜெயிலுக்கு வந்திருந்தனர். சனிக்கிழமையன்று இரவு அவர்கள் இருவரும் சுவர் ஏறி குதித்து 8ம் நம்பர் அறைக்குள் புகுந்தனர். அந்த அறை கைதிகள் யாரும் இல்லாமல் காலியாக இருந்தது. இதை பயன்படுத்தி அவர்கள் இருவரும் இரவு முழுக்க அங்கு சுரங்கம் தோண்டினார்கள்.
சிறைச்சாலை சுற்றுச்சுவர் மிக அருகே அந்த அறை இருந்ததால் சிறிதளவு சுரங்கம் தோண்டியதும் வெளியில் வந்து சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டனர்.
நேற்று காலை அறை வாரியாக கைதிகள் இருப்பு சரிபார்பக்கப்பட்டது. அப்போது 7ம் நம்பர் அறையில் இருந்த பைசன், ஜாவித் இருவரும் மாயமாகி இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறை முழுக்க சோதனை நடத்திய போது, 8ம் நம்பர் அறையில் இருந்து 2 கைதிகளும் சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறைத்துறை போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பைசன் பிடிபட்டான். ஜாவித் தலைமறைவாகி விட்டான். அவனை டெல்லி போலீசார் தேடி வருகிறார்கள்.
அதிநவீன உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட திகார் ஜெயில் 2 கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பியது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சுரங்கம் தோண்டுவதற்கான கருவிகள் கைதிகள் கையில் எப்படி கிடைத்தன என்பது பற்றி உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை ஜெயில்ல பள்ளிக்கூடம் படிச்சவங்க... வேலூர் ஜெயில்ல வெள்ளையடிச்சவங்க என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வார். இனி திகார்லயே சுரங்கம் தோண்டி தப்பினவங்க நாங்க என்று வசனம் வந்தாலும் வரலாம்.