ஜம்மு காஷ்மீரில் பாஜக, குப்கர் அணிக்கு எதிராக களத்தில் குதித்த மேலும் 2 கட்சிகள்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், குப்கர் கூட்டணிக்கு எதிராக மேலும் 2 பிராந்திய கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது அரசியல் சாசனப் பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்ப்ட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.
அண்மையில் லடாக் பிராந்திய கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது. இதில் 51% வாக்குகள் பதிவாகின.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்குகிறது! 24 மணிநேரத்தில் 496 பேர் மரணம்
ஜம்மு காஷ்மீர் அணிகள்
ஜம்மு காஷ்மீரில் பாஜக ஒரு பக்கமாகவும், பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியாகவும் உள்ளன. இதில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என பெரும்பாலான கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி குப்கர் அணியுடன் பட்டும் படாமலும் உள்ளது.
மேலும் 2 கட்சிகள்
இந்த பிரதான கட்சிகள் இல்லாமல் பாஜக, காங்கிரஸ் மற்றும் குப்கர் கூட்டணியை எதிர்த்து மேலும் 2 கட்சிகள் களத்துக்கு வந்துள்ளன. முன்னாள் பாஜக தலைவரான லால்சிங்கின் டோக்ரா ஸ்வபிமான் சங்க்தான்- Dogra Swabhiman Sangathan (DSS) கட்சியும் இதில் ஒன்று. மற்றொன்று இக்ஜூட் ஜம்மு- IkkJutt Jammu. இந்த அமைப்புதான் கதுவா பலாத்கார சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோரி போராட்டங்களை முன்னெடுத்தது.
ஜம்மு தனி மாநிலம்
இந்த இரு கட்சிகளுமே ஜம்மு பிராந்தியத்தையே தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகின்றன. மேலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கியதையும் இந்த இரு கட்சிகளும் எதிர்க்கவும் இல்லை. ஜம்மு பிராந்திய மக்கள் பலியாடுகளாக்கப்படுகின்றனர்; புதிய சட்டங்களால் ஜம்மு மக்கள் வீடற்றவர்களாக்கப்படுகின்றனர் என்பதும் இந்த கட்சிகளின் குற்றச்சாட்டு.
குடைச்சல் தரும் கட்சிகள்?
மேலும் பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான் என்கிற விமர்சனத்தை இந்த இரு கட்சிகளும் முன்வைக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் எந்த அணி எந்த அதிகாரத்துக்கு வந்தாலும் இந்த இரு கட்சிகளும் குடைச்சல் கொடுக்கக் கூடிய வலிமையை பெறுமா என்பது டிசம்பர் 22 தேர்தல் முடிவுகளில் தெரியவரும். ஏனெனில் இந்த இரு கட்சிகளும் ஜம்மு பிராந்தியத்தில் மட்டுமே தங்களது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.