கேரளாவில் பரிதாபம்: அருகருகே வசித்த 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் கூட்டாக தற்கொலை!
கொல்லம்: கேரளாவில் அருகருகே வசித்துவந்த இரு குடும்பத்தினைச் சேர்ந்த 6 பேர் கூட்டாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் பரவூரில் வசித்து வந்தவர் அர்ச்சனா. இவருக்கு அனு, பொன்னி என 2 குழந்தைகள் இருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரான அர்ச்சனா சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரதீஷ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரான இவருக்கு சரண்யா என்ற மனைவியும், உண்ணி என்ற மகனும் இருந்தனர்.
பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்த இந்த 2 குடும்பமும் நேற்று திடீரென தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பரவூரில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ள இந்த தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், பண பிரச்சினை தொடர்பாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். எனினும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.