ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நாளில் டிடிவி தினகரன் ஆஜராக டெல்லி கோர்ட் உத்தரவு
இரட்டை இல்லை லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் வரும் 21ஆம் தேதி ஆஜராக டெல்லி தீஸ்சஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: இரட்டை இல்லை லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தினகரன் உட்பட 9 பேர் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் வரும் 21ஆம் தேதி ஆஜராக டெல்லி தீஸ்சஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர் நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் தரப்பு ரூ.10 கோடி பேரம் பேசியதாகவும், ரூ.1.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும், டிடிவி தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்தினர். கடந்த ஏப்ரல் 26ம் தேதி தினகரனை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
தினகரன் பெயர் சேர்ப்பு
42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளிவந்த தினகரன் கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சில எம்எல்ஏக்களை ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தினகரன் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டது.
புரோக்கர் பெயர் மட்டுமே
டெல்லி குற்றவியல் போலீசார் நேற்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முதல் கட்டமாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டுமே சேர்க்கப்பட்டது.
தினகரன் பெயர் இணைப்பு
இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக 40 பக்கங்கள் கொண்ட ஒரு புதிய குற்றப்பத்திரிக்கையை தீஸ்ஹசாரே மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளோம். இதில் வழக்கின் முக்கிய நபர்களான டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, புல்கித் குந்த்ரா மற்றும் ஜெய்விக்ரம் கரண் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
8 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு
அதிலும் குறிப்பாக 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புதிய குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் விரைவில் அவர் மீண்டும் டெல்லி குற்றவியல் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வாக்குப்பதிவு நாளில் விசாரணை
இந்த நிலையில் டிடிவி தினகரன் வரும் 21ஆம் தேதி ஆஜராக டெல்லி தீஸ்சஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அது இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு நாளாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார் டிடிவி தினகரன், அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருதுகணேசுக்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறார். இலை, சூரியனை, தினகரனின் குக்கர் முந்துவதாகவும் சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
மீண்டும் திகார் வாசம்
இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளில் தினகரன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் தினகரன் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. அப்போ அவரை நம்பியவர்கள் கதி?