தினகரன், சுகேஷை நன்றாக தெரியும்… ஆஸ்திரேலியா பிரகாஷை அரசு சாட்சியாக மாற்ற டெல்லி போலீஸ் முடிவு
இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் ஆஸ்திரேலியா பிரகாஷை அரசு சாட்சியாக சேர்க்க உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட ஆஸ்திரேலியா பிரகாஷ் என்பவரை அரசு தரப்பு சாட்சியாக சேர்க்க டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக கட்சி, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் அணியாக பிரிந்தது. இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தன.
இதனிடையே, இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு பெறும் முயற்சியாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனும் கைது செய்யப்பட்டார்.
பிரகாஷ்
இந்நிலையில், சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற்று தருவதாக பணம் பெற்ற வழக்கில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வி.சி.பிரகாஷ் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்மன்
ஆஸ்திரேலியா பிரகாஷை விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆஜர்
அதன்படி, இன்று டெல்லி போலீசாரிடம் நேரில் பிரகாஷ் ஆஜரானார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், தினகரன் மற்றும் சுகேஷை தெரியும் என்று ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரசு சாட்சி
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா பிரகாஷை அரசு தரப்பு சாட்சியாக சேர்க்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இவரிடம் நடத்தப்படும் தொடர் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.