உணவு, தண்ணீர் இல்லாமல் இருட்டறையில் கிடந்த குழந்தைகள்... 3 நாளுக்கு பிறகு மீட்கப்பட்ட அவலம்!
டெல்லி: குடிகாரத் தந்தையால் இருட்டறைக்குள் வைத்து பூட்டப்பட்ட இரு குழந்தைகள் 3 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சமயபூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு பப்லு (35), தன்னுடைய மனைவி ரோஷி மற்றும் இரு குழந்தைகள் அல்கா (8), ஜோதி (3) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இரு குழந்தைகளை விட்டுவிட்டு ரோஷி சென்றுவிட்டார்.
இதையடுத்து, எந்த வேலைக்கும் செல்லாத பப்லு தன்னுடை இரு குழந்தைகளையும் ஒரு இருட்டறையில் அடைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்து ஒருவித துர்நாற்றம் வருவதாக பக்கத்து வீட்டினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த போலீசார் பூட்டிய அறையை உடைத்து பார்த்ததில் உடலில் புழுக்கள் தோன்றி மோசமான நிலையில் இரு குழந்தைகளும் சுருண்டு கிடந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு பாபா அம்பேத்கார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில் குழந்தைகளின் தந்தை பிண்டி ஒரு முழுநேரக் குடிகாரர் என்பதும் குடியில் இரு குழந்தைகளையும் வீட்டில் வைத்துப் பூட்டியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், மூன்று நாட்கள் வரை தண்ணீர், சாப்பாடு இல்லாமல் இரு குழந்தைகளும் இருட்டறைக்குள் தவித்துள்ளனர். வெளிச்சம் துளியும் இல்லாததால் இரண்டு குழந்தைகளின் உடல்களும் புழுக்கள் தோன்றும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. தற்போது சிகிச்சையினால் இருவரின் உடல்நலத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.