ஒடிசாவில் திருமணம் செய்வதாகக் கூறி மைனர் மகள்கள் ரூ. 20,000க்கு விற்பனை... பெற்றோர் கைது
புவனேஷ்வர்: தனது இரண்டு மைனர் சகோதரிகளை ரூ. 20 ஆயிரத்திற்கு விற்று விட்டதாக ஒடிசா போலீசில் பெற்றோர் மீது மகள் ஒருவர் அளித்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவிலுள்ள சாம்பல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா. கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவருக்கு ஜோதி (13), அஞ்சலி (14) உட்பட உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஒரு சகோதரியையும், அதற்கு அடுத்த சில தினங்களில் மற்றொரு சகோதரியையும் காணவில்லை என புஷ்பா போலீசில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில், இது தொடர்பாக தனது பெற்றோரிடம் அவர் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் அச்சிறுமிகளுக்கு திருமணமாகி விட்டதாக பதிலளித்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், பெற்றோரின் பதிலில் சந்தேகமடைந்த புஷ்மா, தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது தங்கைகள் ரூ. 20 ஆயிரத்திற்கு மத்தியப் பிரதேசத்திற்கு விற்கப் பட்டு விட்டதாக புஷ்பா சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இடைத்தரகர் ஒருவர் செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஏற்கனவே, திருமணத்திற்கு முன்னர் தன்னையும் பெற்றோர் விற்கப் பார்த்ததாகவும், அதிர்ஷ்டவசத்தால் திருமணம் நடைபெற்று தான் தப்பி விட்டதாகவும் புஷ்பா தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தப் புகாரை புஷ்பாவின் பெற்றோர் மறுக்கின்றனர். தனது இரண்டு மகள்களையும் மத்தியப் பிரதேசத்தில் திருமணம் செய்து கொடுத்திருப்பதாகவும், விற்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், மாப்பிள்ளைகளின் விபரத்தைக் கூற அவர்கள் மறுத்து விட்டனர்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் அச்சிறுமிகளுக்கு திருமணம் நடந்திருந்தாலும் அது சட்டப்படி குற்றமே எனக் கூறி புஷ்பாவின் பெற்றோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதோடு, மத்தியப்பிரதேசத்திற்கு போலீசாரை அனுப்பி மாயமான இரண்டு மைனர் சிறுமிகளை மீட்கும் நடவடிக்கையையும் முடுக்கி விட்டுள்ளனர்.