டெல்லியில் ஒரே நாளில் 2 சிறுமிகள் பலாத்காரம்- போலீஸ் மீது முதல்வர் கேஜ்ரிவால் பாய்ச்சல்!
டெல்லி: டெல்லியில் நேற்று இரவு மட்டும் 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டதாக முதல்வர் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
டெல்லியில் நங்லோய் பகுதியில் ராம்லீலா நிகழ்ச்சியின் போது திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது மர்ம நபர்கள் இரண்டரை வயது சிறுமியை கடத்தி சென்றனர்.
இன்று அதிகாலை அந்த சிறுமி பூங்கா ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் உடனடியாக சஞ்சய்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் நேற்று இரவு ஆனந்தவிகார் பகுதியில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த சிறுமியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த 2 சிறுமிகளும் கவலைக்கிடமாக உள்ளனர். ஒரே நாளில் டெல்லியில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Repeated rape of minors is shameful and worrying. Delhi police has completely failed to provide safety. What are PM n his LG doing?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 17, 2015
இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமியை டெல்லி மருத்துவமனையில் சென்று பார்த்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேஜ்ரிவால், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க டெல்லி போலீசார் தவறி விட்டனர். பிரதமரும், துணைநிலை ஆளுநரும் என்ன செய்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.