லலித் மோடி மனைவி சிகிச்சை பெற்ற போர்ச்சுகல் ஹாஸ்பிடலுடன் ஒப்பந்தம் போட்ட ராஜஸ்தான் அரசு!!
டெல்லி: ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் மனைவி சிகிச்சை பெற்ற போர்ச்சுகலின் லிஸ்பன் மருத்துவமனையுடன் ராஜஸ்தான் அரசு ஒப்பந்தம் போட்டிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐ.பி.எல். நிதிமுறைகேடுகளில் சிக்கிய இந்தியாவை விட்டு தப்பி ஓடியவர் லலித் மோடி. லண்டனில் உள்ள லலித் மோடியின் மனைவி போர்ச்சுகல் நாட்டில் சிகிச்சை பெறுவதற்காக விசா உதவிகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் என்கிற விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமல்ல ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரராஜேவும் தமக்கு உதவியதாகவும் தமது மனைவி போர்ச்சுகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது வசுந்தரராஜேவும் உடனிருந்தார் எனவும் லலித் மோடி உண்மைகளை போட்டு உடைத்து வருகிறார்.
முன்னதாக வசுந்தரராஜே சிந்தியாவின் மகனின் நிறுவனத்துக்கு லலித் மோடி ரூ11.63 கோடி பணத்தை கைமாறியது குறித்தும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் லலித் மோடியின் மனைவி, போர்ச்சுகலில் லிஸ்பனில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையுடன் ராஜஸ்தானின் வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்காக நிலத்தையும் ராஜஸ்தான அரசு ஒதுக்கியிருதது. அப்போது இது குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்த வசுந்தரராஜே சிந்தியா, மாநில மக்களின் நலனுக்காகவே இத்தகைய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறியிருந்தார்.
ஆனால் லலித் மோடியின் மனைவியுடன் அந்த மருத்துவமனையில் உடன் இருந்ததை எல்லாம் மறைத்துவிட்டு ஏதோ ஒரு ஆதாயத்துக்காக இந்த ஒப்பந்தத்தை வசுந்தரராஜே தலைமையிலான அரசு செய்துள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலகக் குரலை எழுப்புகின்றன. ஆனால் அப்படி எந்த ஒரு உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை என அடித்துச் சொல்கிறது ராஜஸ்தான் பாரதிய ஜனதா.