அமர்நாத் சென்ற சென்னை யாத்ரீகர்கள் 2 பேர் 'மாரடைப்பால்' மரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற சென்னையை சேர்ந்த 2 யாத்ரீகர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த 2 யாத்ரீகர்கள் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தனர்.
நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த மாதம் 28ந் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அமர்நாத் குகைக் கோவிலுக்கு இதுவரை 1,12,143 பேர் சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இதில் நேற்று மட்டும் 18,994 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், அமர்நாத் யாத்திரை சென்ற சென்னையைச் சேர்ந்த ரேணுகா (வயது 67) என்பவர் குகைக் கோவில் அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் சென்னையைச் சேர்ந்த மற்றொரு யாத்ரீகர் ஜே. ஆறுமுகம் (61) என்பவர் குகைக் கோவில் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இதனையடுத்து இந்த ஆண்டு அமர்நாத் சென்றபோது உயிரிழந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.