குஜராத்தில் மாணவர்களிடையேயான தகராறு மத மோதலானது: 2 பேர் பலி- 50 வீடுகள் தீக்கிரை!
குஜராத்தில் மாணவர்களிடையேயான தகராறு மத மோதலாக வெடித்தது. இம்மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 50 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
பதான்: குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மத மோதலாக வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர். 50 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.
பதான் மாவட்டத்தில் வடவள்ளி கிராமத்தில், 10-ஆம் வகுப்பு தேர்வை முன்னிட்டு பள்ளிக்கூடத்தின் படிக்கட்டுகளில் இரு மாணவர்கள் ஏறிய போது ஒருவர் கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் இரு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சிறிய விவகாரம் சுற்றியுள்ள 3 கிராமங்களுக்கு பரவி மதக்கலவரமாக வெடித்தது. இதில் 50 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டன.
தகவலறிந்த பதான் மற்றும் மெஹ்சானா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இச்சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.