சினிமா ஸ்டைலில்... மயக்கமருந்து கொடுத்து போலீசை தூங்க வைத்து தப்பிய கைதிகள்!
அமிர்தசரஸ்: சினிமா படப் பாணியில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, போலீஸ் காவலில் இருந்த இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர் மனோகர் குமார், குர்பீக்சிங் என்ற இரு விசாரணைக் கைதிகள்.
இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்த, நேற்று கபூர்தாலா சிறையில் இருந்து போலீஸ் வேனில் போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, சாலையோர டீக்கடை ஒன்றில் டீ சாப்பிட போலீசார் வேனை நிறுத்தியுள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கைதிகள் இருவரும், பாதுகாப்புக்கு வந்த போலீசாருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளனர்.
அதில் மயக்க மருந்து கலந்து இருப்பது தெரியாமல், போலீசாரும் அதனைக் குடித்து விட்டனர். இதனால், சிறிது நேரத்திலேயே போலீசார் மயங்கினர். அதனைத் தொடர்ந்து கைதிகள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைந்து செயல்பட்ட போலீசார் மனோகர் குமாரைக் கைது செய்தனர். குர்பீர் சிங்கைத் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு கைதிகள் மீதும், அவர்களிடம் குளிர்பானத்தை வாங்கிக் குடித்து மயங்கிய நான்கு போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.