சாலை அமைக்கும் பணியின் போது பரிதாபம்... உயிருடன் மண்ணில் புதைந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேர்!
பாட்னா: பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் பலம்கார்ஹியா கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது மண்ண்டும் எடுக்கும் பணியைச் செய்து கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் மீது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது.
இதில் அவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மற்றொரு நபரும் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று மேற்கு வங்காளத்தில் நேற்று சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மண் சரிந்து உயிருடன் புதைந்து பலியாகினர். பகுதி நேர பணியாளர்களான அவர்களது பெயர் ஆனந்தா ராய் (50) மற்றும் சம்பு மேட்டி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளது.