காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு- 2 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் கன்ஜிர் கிராமத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அடங்கிய பாதுகாப்பு படை கிராமத்திற்கு விரைந்து சென்றது.
கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தனர்.
பதிலுக்கு ராணுவமும் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இதற்கிடையே குறிப்பிட்ட பகுதியை விட்டு தீவிரவாதிகள் நகர்ந்துவிட்டனர். 2 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் இச்சண்டையில் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாதிகள் தப்பியதை அடுத்து அப்பகுதியில் ராணுவம் கூடுதலாக குவிக்கப்பட்டு, தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.