2 மகா. சகோதரிகளுக்கு விரைவில் தூக்கு... 9 சிறார்களைக் கொன்றவர்கள். தூக்கிலிடப்படும் முதல் பெண்கள்!
டெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளதால் இவர்கள் விரைவில் தூக்கிலிடப்படவுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா கேவிட். இருவரும் ஏழைக் குழந்தைகளைக் கடத்தி வந்து பிச்சை எடுக்கவும், திருடவும் பழக்கி அதில் ஈடுபடுத்தி வந்தனர். குழந்தைகளாக இருக்கும் வரை அவர்களைப் பயன்படுத்தி திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துவார்கள்.
வளர்ந்ததும் அவர்களைக் கொன்று விடுவார்கள். இவர்கள் குழந்தையைக் கொல்வது மிகக் கொடூரமாக இருக்கும். குழந்தைகளின் தலையை இரும்புக் கம்பியால் பலமாக அடித்தும், கழுத்தை நெரித்தும் கொடூரமாக ஈவு இரக்கமே கொல்வார்கள்.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 96 வரையிலான காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து 13 குழந்தைகளைக் கடத்தி அதில் 9 பேரைக் கொன்று விட்டனர். பின்னர் இருவரும் போலீஸில் சிக்கினர். இவர்களுக்கு விசாரணைக்குப் பின்னர் கடந்த 2001ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அப்பீல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு இவர்கள் இருவரும் கருணை மனு அனுப்பினர். அந்த மனுவை தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் விரைவில் தூக்கிலிடப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் தூக்கிலிடப்படவுள்ள தகவல்கள் அவர்களின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.
சுதந்திர இந்தியாவில் இதுவரை பெண்கள் யாரும் தூக்கிலிடப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தூக்கிலிடப்படும் முதல் பெண் என்ற பெயரை இவர்கள் இருவரும் பெறுகின்றனர்.