மகாராஷ்டிராவில் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து: உரிமையாளர், மனைவி பலி
பிவாண்டி: மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 2 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து வடகிழக்காக 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிவாண்டியில் இருக்கும் நவின் தனேரி பகுதியில் 2 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் ஒன்று இன்று காலை 7.30 மணி அளவில் இடிந்து விழுந்தது.
இதில் அந்த கட்டிடத்தில் வசித்த 12 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சஜன்லால் மகாதேவ் குப்தாவுக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் அவர் உள்பட 3 குடும்பங்கள் வசித்து வந்தன. குடியிருக்க தகுதியற்ற கட்டிடம் என மாநகராட்சி அறிவித்தது. கட்டிடத்தை காலி செய்யுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதையும் மீறி அந்த 3 குடும்பங்கள் அங்கு வசித்தன.
இந்நிலையில் சஜன்லால்(60) மற்றும் அவரது மனைவி சத்யாவதி(55) ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி பிவாண்டியின் ஜேபி நகர் பகுதியில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகினர், 22 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.