ஐஎஸ்சி வரலாற்றிலேயே முதல் முறையாக.. 2 மாணவர்கள் எல்லா பாடத்திலும் 'சென்டம்'!
ஐஎஸ்சி பிளஸ் 2 தேர்வில் 2 மாணவிகள் அனைத்து பாடத்திலும் சென்டம் எடுத்திருக்கிறார்கள்.
டெல்லி: இதெல்லாம் எப்பவாச்சும் நடக்கும் அதிசயம்தான். கேட்டவுடனேயே சந்தோஷமாக இருக்கிறது. ஆம், ஐஎஸ்சி பிளஸ்டூ பரீட்சையில் இரு மாணவிகள் எல்லாப் பாடத்திலும் 100 சதவீத மார்க் எடுத்து பிரமிக்க வைத்துள்ளனர்.
ஐஎஸ்சி பாடத் திட்ட பிளஸ்டூ தேர்வில் மாணவர்கள் எல்லாப் பாடத்திலும் சென்டம் போடுவது என்பது இதுவரை நடந்ததே இல்லையாம். இதுதான் முதல் முறையாம். அந்த வகையில் இந்த இரு மாணவிகளும் சாதனை படைத்து விட்டனர்.
கொல்கத்தா மற்றும் பெங்களூருக்கு இந்த பெருமை போய்ச் சேர்ந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த தேவங் குமார் அகர்வால் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த விபா சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஐஎஸ்சி பிளஸ்டூ தேர்வில் 100 சதவீத மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.
ஐஎஸ்சி பிளஸ்டூ தேர்வில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97.84 சதவீதம் ஆகும். மாணவர்கள் தேர்ச்சி குறைவுதான். அதாவது 95.40 சதவீதமாகும். முதலிடத்தை தேவங் குமார் அகர்வால் மற்றும் விபா சுவாமிநாதன் பெற்றுள்ளனர்.
2வது இடத்தை 99.75 சதவீத மதிப்பெண்களுடன் 16 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். 3வது இடத்தில் 36 பேர் 99.50 சதவீத மதிப்பெண்களுடன் வந்துள்ளனர்.