டெல்லியில்… 2 தான்ஸானியா நாட்டு பெண்கள் பலாத்காரம்!
டெல்லி: தான்ஸானியா நாட்டைச் சேர்ந்த 2 பெண்களை, தெற்கு டெல்லியின சரோஜினி நகரில் 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 4. 30 மணியளவில் சரோஜினி நகர் பகுதியில் இந்த ஆண்களுக்கும், இரு பெண்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஒரு வீட்டில் இந்த மோதல் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு அறையில் நான்கு பேரும் இருந்துள்ளனர்.
போலீஸாரிடம், இந்த இரு ஆண்களும் தங்களைப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இரு பெண்களும் கூறவே, போலீஸார் அதன் பேரில் அவர்களைக் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான இருவரின் பெயர்கள் சதீஷ் மற்றும் குனால். இருவருக்கும் 27 வயதாகிறது. சதீஷ் ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர், குனால் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர். இருவரையும் போலீஸார் கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
ஆனால் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் வேறு ஒரு பிரச்சினை தொடர்பாக தங்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும், ஆனால் பாலியல் பலாத்காரப் புகாரை அந்தப் பெண்கள் தங்கள் மீது சுமத்தியுள்ளதாகவும் கைதான இருவரும் கூறியுள்ளனர்.