ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்: குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு படையினர் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
தீவிரவாதிகளை சரணடையுமாறு கூறினர். ஆனால், தீவிரவாதிகள் சரணடைய மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இந்த என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரு ஏ.கே.47 துப்பாக்கிகளை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்திலும் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை குறிவைத்து என்கவுண்டர் நடத்தினர்.
தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரு தினகங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் லக்சர் இ தொய்பா தீவிரவாதி அபு துஜானா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.