ஊடகங்களில் அதிகரிக்கும் செக்ஸ் தொல்லை: 48% பெண் பத்திரிக்கையாளர்கள் பாதிப்பு
மும்பை: ஊடகங்களில் பணிபுரியும் மூன்றில் இரண்டு பெண்கள் சக பணியாளர்களினாலே, அவரது உயர் அதிகாரியினாலே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லைகள் பற்றி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது என்பதை சமீபத்திய சம்பவங்கள் மெய்பித்துக் கொண்டுள்ளன.
தெகல்ஹா ஆசிரியர் தனது மகள் வயதை ஒத்த பெண்ணிடம் அத்து மீறியதற்காக இன்றைக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல எண்ணற்ற அத்துமீறல்கள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
பணிபுரியும் இடங்களில் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்பாடும் பாலியல் தொல்லைகள் குறித்த ஆய்வு ஒன்றினை சர்வேதேச பெண்களின் ஊடகவியல் அமைப்பு (ஐ.டபிள்யூ.எம்.எப்) மேற்கொண்டது. சர்வதேச அளவில் பெண்களுக்கு பலவித அச்சுறுத்தல்கள், இன்னல்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மன உளைச்சல்
இந்த ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான பெண் பத்திரிக்கையாளர்கள் ஏதாவது ஒரு விதத்தில் சக பணியாளர்கள் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை ஒத்துக்கொண்டுள்ளனர். இதன் மூலம் மனஉளைச்சலும், மனரீதியான சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர்
ஆய்வில் பங்கேற்ற 822 பத்திரிக்கையாளர்களில் 64.48 சதவிகிதம் பேருக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் நேர்ந்துள்ளதாக ஐ.டபிள்யூ. எம்.எப் இயக்குநர் எலீசா தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்
ஆய்வில் பங்கேற்ற 822 பேரில் 530 பெண் பத்திரிக்கையாளர்கள் அதாவது 64 சதவிகிதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை ஒத்துக் கொண்டுள்ளனர்.
சக ஊழியர்கள்
ஊடகத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள், நிறுவன அதிகாரிகள், இன்டர்வியூ செய்பவர்கள் என அனைவரின் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் பெண் ஊடகவியாலாளர்கள்.
பேச்சும், சைகையும்
சைகையினாலும், செக்ஸ் ஜோக்குகள் மூலமும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதில் 57 சதவிகிதம் பேர் சக ஊழியர்களின் ஆபாச சைகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுத்தும் உடைகள், பேச்சுகளையும் கூட ஆபாசப்படுத்தி பேசுவதாக கூறியுள்ளனர்.
போர்க்களமாகும்
ஊடகங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி குரல் எழுப்பும் பட்சத்தில் அது போர்க்களம் போலவே மாறிவிடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள்தான் பணியை விட்டு போகும் சூழலுக்கு ஆளாகின்றனர். காரணம் பாலியல் துன்புறுத்தலை செய்தவர் உயரதிகாரியாகவோ, நிறுவனத்தலைவராகவோ இருக்கும் பட்சத்தில் எதிராக குரல் கொடுத்த பெண் பத்திரிக்கையாளருக்கு எதிராக போர் தொடுக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
பாதுகாப்பு இல்லையே?
80 சதவிகித நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை என்று கூறுகின்றனர். 85 சதவிகிதம் பேர் தொடுகையின் மூலமாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர்.
அதிர்ச்சிகரமான ஆய்வு
உடல்ரீதியான பாதிப்பு 22 சதவிகிதம் பேருக்கு நேரிட்டுள்ளது. கையால் தொடுவது, ஆயுதங்களைக் கொண்டு தாக்கி அச்சுறுத்துவது போன்ற 5 வகையான தாக்குதல்களுக்கு பெண் பத்திரிக்கையாளர்கள் ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற்ற ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்துள்ளன.