அடுத்தடுத்து இரு பெரும் விபத்துகள்.. கருப்பு வெள்ளி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கேரளா
கோழிக்கோடு: கேரளாவுக்கு இன்று கருப்பு வெள்ளிக்கிழமை என்று கூறலாம். அடுத்தடுத்து இரு பெரும் விபத்துக்கள் அங்கு நடந்து, 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
Recommended Video
இரண்டு சம்பவங்களுமே மூலகாரணம் மழை மற்றும் அதைச்சார்ந்த வெள்ளம் ஆகியவை தான்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நான்கு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி நிலச்சரிவு
இந்த நிலையில்தான் இன்று காலை கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை என்ற பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 80 பேர் அங்கு இருந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
துபாய் விமானம்
இந்த பெரிய கோர விபத்து தொடர்பான வடு ஆறும் முன்பாக இன்று இரவு துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானம் ரன்வேயில் சறுக்கி இரண்டாக பிளந்தது. இதில் தற்போது வரை கிடைத்துள்ள தகவலின்படி 16 பேர் பலியாகி உள்ளனர். இதில் விமானியும் ஒருவர்.
அடுத்தடுத்த செய்திகள்
காலை முதல் தொடர்ந்து செய்தி சேனல்கள் இடுக்கி மாவட்ட நிலச்சரிவு தொடர்பாக செய்திகளை வழங்கி வந்தன. இரவு, கோழிக்கோடு கோர விபத்து காரணமாக அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன. ஆகமொத்தம் காலை முதல் தொடர்ந்து மோசமான இரு கோர விபத்துக்கள் தொடர்பான செய்திகள்தான் தேசிய அளவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
கோழிக்கோடு நிலவரம்
கோழிக்கோடு விமான விபத்து நடைபெற்ற இடத்துக்கு அருகே கொரோனா வைரஸ் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி அதிகமாக இருக்கிறது. அவசரத்திற்காக அங்கிருந்த நோயாளிகளும் ஓடிவந்து விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இது மற்றொரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இந்த விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த அசம்பாவித சம்பவங்களால் கேரள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவும் தான்.