மலையேற முயன்ற இரு பெண்கள்.. டென்ஷனான பக்தர்கள்.. அப்பாச்சிமேட்டை சுற்றி அரண் போல் நின்று எதிர்ப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அப்பாச்சிமேடு வழியாக மலையேற முயன்ற இரு பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்தது. ஆனால் பக்தர்கள், பாஜக அமைப்பினர், இந்து அமைப்பினர் என பெரும்பாலானோர் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து ஐப்பசி மாத நடை திறப்பையொட்டி ஏராளமான பெண்கள் சன்னிதானம் செல்ல புறப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பெண்களை ஒரு கட்டத்துக்கு மேல் பக்தர்கள் மேற்கொண்டு செல்லவிடவில்லை.
11 பெண்கள்
இதனால் அவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 11 பெண்கள் நேற்று சபரிமலை சென்றனர்.
திரும்பி சென்றனர்
போலீஸ் பாதுகாப்புடன் மலையேறிய அவர்கள் ஐயப்ப பக்தர்களால் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்கள் போராட்டத்தால் 11 பெண்களுக்கும் மலையேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 11 பேரும் திரும்பி விட்டனர்.
இருமுடி
கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் இன்று அதிகாலை இருமுடி கட்டி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்டனர். பம்பை போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் அப்பாச்சிமேடு வரை தடங்கலின்றி நடந்து சென்றனர்.
பக்தர்கள் கூடினர்
அப்பாச்சிமேடு சென்றதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் திடீரென அங்கு குவிந்தனர். அவர்கள் மலையேற முயன்ற இளம் பெண்கள் இருவரையும் சுவர் போல் நின்று மறித்தனர். நேரம் ஆக ஆக மேலும் பல பக்தர்கள் அங்கு கூடினர்.
பெண்கள்
இதனால் இருவரையும் சன்னிதானம் அழைத்து செல்வது கடினம் என கைவிரித்த போலீஸாரிடம் இருவரும் வாக்குவாதம் செய்தனர். எனினும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இரு பெண்களும் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.