பலாத்கார முயற்சி... ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்கள்
தானே: ஆட்டோ ஓட்டுநர் பலாத்காரம் செய்ய முயன்றதை அடுத்து இரண்டு இளம் பெண்கள் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளனர். இந்த சம்பவம் மகராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரிகா பாட்டீல்(22), பிரதிஷ்கா பவுர்னிக்(17) என்ற இரண்டு இளம் பெண்கள் மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் நேற்று மாலை அகில பாரத வித்யார்தி பரிஷத் (தேசிய மாணவர் அமைப்பு) நடத்திய ஒரு விழாவில் பங்கேற்க சென்றனர். இவர்கள் வீடு திரும்புவதற்காக இரவு சுமார் 9 மணியளவில் மஹ்லிர் திரையரங்கம் அருகே ஒரு ஆட்டோவில் ஏறினர்.
கேட்பரி சந்திப்பை நெருங்கியபோது, அவர்கள் வீட்டிற்கு போவதற்காக கூறிய பாதையை தவிர்த்து மாற்றுப்பாதையை நோக்கி ஆட்டோவை வேகமாக டிரைவர் ஓட்டிச்சென்றார்.
அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். உஷாரடைந்த அவர்கள் இருவரும் தங்களது கற்பை பாதுகாத்துக்கொள்ள ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தனர்.
இதில் படுகாயமடைந்ததால் ஜூபிடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை நேரில் சந்தித்த போலீஸ் துணை கமிஷனர் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து, தப்பியோடிய ஆட்டோ டிரைவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.