போர்வெல்லில் தவறி விழுந்த குழந்தை... 12 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு
ஆந்திராவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை, 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.
விஜயவாடா: ஆந்திராவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை, 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்டனர் மீட்பு படையினர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் உம்மிடிவரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ராவ். இவர் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் 20 நாட்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு தோண்டினார். அதில் தண்ணீர் வராத நிலையில், ஆழ்துளை கிணற்றை அப்படியே மூடாமல் விட்டுள்ளார்.
இந்த நிலையில், மல்லிகார்ஜுன ராவின் 2 வயது மகன் சந்திரசேகர நேற்று அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
இதில் அவன் 20 அடி ஆழத்துக்குச் சென்று சிக்கிக் கொண்டான். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணிக்கு இடையே, குழந்தை சந்திரசேகரும் அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டது. இதனால் குழந்தை உயிருக்குப் பாதிப்பு நேரவில்லை.
12 மணி நேரங்களுக்குப் பின்னர் சிறுவனை மீட்பு குழு உயிருடன் மீட்டது. இதனையடுத்து குழந்தை முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். மீட்பு குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டதால் உயிர்ச் சேதம் இல்லை என்று அக்கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.