2 ஆண்டுகளை கடந்த மோடி அரசு.. சாதனைகளும், சறுக்கல்களும்!
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 1 தசாப்த ஆட்சி காலத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்போடு, முழு பெரும்பான்மையோடு மத்தியில் அமைத்தது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி.
இதனால் ஆட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 2014 மே மாதம் ஆட்சிக்கு வந்த மோடி அரசு தனது முதல் சாதனையாக கூறுவது, ஊழல் எதுவுமே தங்கள் ஆட்சியில் நடக்கவில்லை என்பதைத்தான். இதன்பிறகுதான் மற்ற திட்டங்களை அடுக்குகிறார்கள் பாஜகவினர்.
லலித் மோடி, மல்லையா போன்றோர் வெளிநாடு தப்பி செல்லவிட்டதே ஒரு வகையில் ஊழல்தான் என்கின்றனர் எதிர்க்கட்சிகள். இதோ மோடி அரசின் இரு வருட ரிப்போர்ட் கார்டு:
அரசியல் வெற்றி
அரசியல் ரீதியாக பாஜக வளர்ந்து வருகிறது. இதுவரை தடம் பதிக்காத மாநிலங்களிலும் பாஜக கால் வைத்துள்ளது. அசாமில் ஆட்சியை பிடித்தது, கேரளாவில் தொகுதியை கைப்பற்றியது இதற்கு உதாரணம்.
காங்கிரஸ் பலவீனம்
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கையை குறைப்பதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மோடி பதவியேற்றதில் இருந்து காங்கிரஸ் தனது கைப்பிடியை தளர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சியை பொறுத்தளவில் உலகமெங்கும் மந்த நிலை இருந்தாலும், இந்தியா அதை தாங்கி, போராடி முன்னெழுந்து வருகிறது. இவ்வாண்டு, பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று வல்லுநர்கள் கணிக்கிறார்கள். 2014ல் இது 7.2 சதவீதமாகத்தான் இருந்தது.
சீனாவை முந்துகிறது
முதலீடு செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளி முன்னேறியது கடந்த ஆண்டில் நடந்த மற்றொரு சாதனை. உற்பத்தி துறைக்கு மோடி அரசு முக்கியத்துவம் தருவது இதற்கு காரணம்.
மானியங்களில் சீர்திருத்தம்
மானியங்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தும் திட்டம் கொண்டுவந்ததன் மூலம், இடைத்தரகர்கள் முடக்கப்பட்டதோடு, உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் பணம் சென்று சேரத்தொடங்கியுள்ளது.
வெளியுறவு
கடந்த கால காங்கிரஸ் ஆட்சியைவிட சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதில் முன்னுரிமை கொடுத்தது மோடி அரசின் மற்றொரு சாதனை. உலக அளவில் இந்தியாவை ஒரு முக்கியமான நாடாக முன்னிருத்த தொடங்கியதோடு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த உறவை பயன்படுத்திக்கொண்டது அரசு. இந்தியாவை போன்ற மன ஓட்டம் கொண்ட நாடுகளை தேடி தேடி போய் நட்பு பாராட்டி தோழமைபாராட்டியுள்ளார் மோடி.
சீனா, பாக்.கிற்கு நெருக்கடி
பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, அந்த நாட்டின் பாரம்பரிய நட்பு நாடுகளான சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளுடன் மோடி நட்பு பாராட்டி வருகிறார். தென் சீன கடல் பகுதியில் அந்த நாட்டின் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது. இலங்கையுடன் எலி, பூனை விளையாட்டு ஆடிக்கொண்டே சீனாவை நெருங்கவிடாமல் செய்து வருகிறது இந்திய அரசு.
கின்னஸ் சாதனை
பிரதமர் ஜன தன யோஜனா என்ற திட்டத்தின் மூலம், அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்க செய்துள்ளது. 2014 ஆகஸ்ட் 23 முதல் 29ம் தேதிக்குட்பட்ட 1 வாரத்தில் மட்டும் 1கோடியே 80 லட்சம் பேருக்கு புதிதாக வங்கி கணக்கு துவங்க செய்ததன் மூலம், இந்த நிகழ்வை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க செய்துள்ளது மத்திய அரசு.
அடேங்கப்பா
இவ்வாண்டு மே மாத நிலவரப்படி, ஜன தன யோஜனா திட்டத்தின்கீழ், 21.74 கோடி மக்களின் வங்கி கணக்கில் ரூ.37,445 கோடி டெபாசிட் பணம் உள்ளது.
ஆதார் தொடரும்
கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், நல்ல திட்டம் என்பதால், ஆதார் அடையாள அட்டை திட்டத்தை உத்வேகத்தோடு தொடரச் செய்துள்ளது மோடி அரசு. இதன்மூலம், பல்வேறு நிதி முறைகேடுகள் கட்டுக்குள் வந்துள்ளன.
மூன்றரை கோடி போலிகள் நீக்கம்
பொது வினியோக பொருட்கள், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊதியம், உரம், பூச்சி மருந்து மானியம், சமையல் எரிவாயு மானியம், போன்றவை போலி கணக்குகள் மூலம், மோசடியாளர்கள் கைகளுக்கு சென்று கொண்டிருந்தன. ஆதார் எண்ணை மானிய திட்டங்களுடன், இணைத்ததன் மூலம், அந்த பணம் உரியவர்களுக்கு மட்டும் சென்று சேருகிறது. இதுவரை, சுமார் 3.5 கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
கோடிக்கணக்கில் சேமிப்பு
சமையல் காஸ், போலி மானிய நிதி மோசடியை தவிர்த்ததன் மூலம், கடந்த நிதியாண்டில், மத்திய அரசு சேமித்த பணம் ரூ.14 ஆயிரத்து 672 கோடி. ஊரக வேலை வாய்ப்பு திட்ட முறைகேட்டை தடுத்ததன் மூலம் இந்த நிதியாண்டில் சேமிக்கப்பட போகும் பணம் ரூ.3 ஆயிரம் கோடி. ஆதார் அட்டை மூலம் போலி ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கிடைக்கப்போகும் பணம் ரூ.10 ஆயிரம் கோடி.
மின் இணைப்பு
மோடி அரசு பதவிக்கு வந்த 2 வருடங்களில் புதிதாக 7 ஆயிரத்து 654 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு தரப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய அரசின் 3 ஆண்டு காலத்தில் 5189 கிராமங்களுக்குதான் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
சாலை வசதி
இதேபோல ஆண்டுதோரும், கிராமப்புறங்களில் சராசரியாக 36,340 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. முந்தைய அரசில் இது சராசரியாக, 24 ஆயிரம் கி.மீகளாக இருந்தது.
தீவிரவாதம்
மோடி ஆட்சிக்கு வந்தபோது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தீவிரவாதிகளிடம் சிக்கி தவித்த கேரள, தமிழக நர்சுகளை பத்திரமாக மீட்ட கையோடு, தீவிரவாத இயக்கத்தில் சேர இந்தியாவில் இருந்து கிளம்பிவர்களை மடக்கி பிடித்து கவுன்சலிங் தர ஆரம்பித்தது அரசு.
தடுப்பு
இஸ்லாமுக்காக ஐஎஸ்ஐஎஸ் போராடவில்லை என்பதை இந்திய முஸ்லிம்களிடம் எடுத்துக்கூறி, மத குருமார்கள் மூலமாகவே இளைஞர்களை மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுத்துள்ளது அரசு.
எதிர்பார்த்த வேகம்
அதேநேரம், எதிர்பார்த்த அளவுக்கு அல்லது மோடி வாக்குறுதி தந்த அளவுக்கு துரித கதியில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்பது குறைபாடு. மோடியின் தேர்தல் பிரசாரத்தை கேட்ட மக்கள் ஓரிரெண்டு மாதங்களில் தாங்கள் லட்சாதிபதியாக மாறிவிடலாம் என நினைத்திருந்தனர். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. அது இப்போதுதான் புரிகிறது.
கருப்பு பணம்
கருப்பு பணத்தை மீட்கும் விஷயத்தில் சொன்ன வாக்குறுதி நிறைவேறவில்லை. இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ள போதிலும், தாக்குதல் தொடருகிறது.
விலைவாசி
மழையின்மை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. இருப்பினும், விலைவாசியை இன்னும் அதிகமாக குறைத்திருக்க முடியும் என்பது வல்லுநர்கள் பார்வையாக உள்ளது.
தொழில்துறை எதிர்பார்ப்பு
மிகப்பெரிய பொருளாதார மாற்றங்களோடு கொள்கைகள் இருக்கும் என நினைத்த தொழில்துறையினருக்கு ஏமாற்றமே. ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போராடுவது ஒரு தோல்வியே.
சர்ச்சைகள்
மோடி அரசு அமைந்த பிறகு சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பேச்சுக்கள், நடவடிக்கைகள் நிகழ்ந்தது கெட்ட பெயரை உருவாக்கியுள்ளது. சமீபகாலமாக இதற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளபோதிலும், அடுத்த 3 ஆண்டு ஆட்சியில் சர்ச்சைகளை குறைத்து சாதனைகளில் மத்திய அரசு கவனம் செலுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.