ராமர், ஹனுமார் பெயரை சொல்லுமாறு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது கொடூர தாக்குதல்-வீடியோ
ஜெய்ஹனுமான் எனக்கூற வற்புறுத்தி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை இரண்டு இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்: ஜெய்ஹனுமான் எனக்கூற வற்புறுத்தி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை இரண்டு இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரண்டு இளைஞர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் நகர் மாவட்டத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இருவர் கடுமையாகத் தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இருவர் சேர்ந்து ஒரு பெண்ணை ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஹனுமான் என முழக்கமிடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு அந்தப் பெண் மறுக்கவே பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். அந்தப் பெண் அலறி அழுதபோதும் அவரை விடாமல் இருவரும் தாக்கியுள்ளனர்.
அந்த இடத்தில் நின்ற பலரும் இதனை வேடிக்கை பார்த்து சிரித்தனர். ஒருவர் கூட இந்த அட்டூழியத்தைத் தடுக்க முன்வரவில்லை
இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவின் பேரில் விசாரித்த காவல்துறையினர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய 2 பேரை கைது செய்துள்ளனர்.