ஆம்புலன்ஸ் லேட்.. அரசு மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர் மீது மரண தாக்குதல்!
லக்னோ: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து எமெர்ஜென்சி பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த டாக்டரை ஒரு கும்பல் அடித்து, உதைத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்பு அதிகரிக்க வலியுறுத்தி, அம்மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் சிதாபூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுபவர் அகிலேஷ் சிங். இன்று எமெர்ஜென்சி பிரிவில் நோயாளிகளுக்கு அவர் சிகிச்சையளித்து கொண்டிருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல், அங்கு அத்துமீறி நுழைந்தது.
அந்த கும்பல், அகிலேஷ் சிங்கை இழுத்து போட்டு அடித்ததோடு, மிதிக்கவும் செய்தது. இதை கும்பலை சேர்ந்த ஒருவன் செல்போனில் வீடியோ படம் பிடித்து அதை டாக்டருக்கே ஃபார்வேர்ட் செய்துள்ளான்.
அதிர்ச்சியடைந்த டாக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், வன்முறையாளர்களில், நான்கு பேரை கைது செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் காலதாமதமாக அனுப்பப்பட்டதாகவும், அதற்காக நோயாளிகளின் உறவினர்களில் சிலர் மருத்துவரை தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.