முத்தலாக் கூறிய கணவன் கொடுமை... ஒரு மாதமாக சோறு தண்ணீரின்றி அடைத்து வைக்கப்பட்ட பெண் பலியான கொடூரம்
முத்தலாக் கூறிய கணவன், தனது மனைவியை ஒரு மாதமாக உணவு, தண்ணீரின்றி ஒரு அறையில் அடைத்து வைத்ததால் அவர் பலியாகிவிட்டார்.
பரேலி: உத்தரப்பிரதேசத்தில் போன் மூலம் முத்தலாக் கூறிய கணவன், மனைவியை ஒரு மாதமாக ஒரு அறையில் உணவின்றி அடைத்து வைத்ததால் அந்த பெண் பலியான கொடூரம் நடந்துள்ளது.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய வேண்டும் என்றால் முஸ்லிம் ஆண்கள் தலாக் தலாக் தலாக் என்று மூன்று முறை கூறிவிட்டால் போதும். சில நொடிகளில் திருமண பந்தம் முடிவடைந்துவிடும்.
இதை அவர்களுக்கான தனி சட்டம் அனுமதிக்கிறது. இந்த சட்டத்தை பல ஆண்கள் தவறாக பயன்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக உச்சநீதிமன்ற ஆலோசனையின் பேரில் மக்களவையில் முத்தலாக் சட்டத்தை ரத்து செய்யும் வகையிலான ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
அந்த சட்டம் ராஜ்யசபாவில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் முத்தலாக் கூறி மனைவியை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பரேலியை சேர்ந்தவர் நஹிம். இவரது மனைவி ரஸியா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் வரதட்சணை கேட்டு அது கிடைக்காததால் போன் மூலம் ரஸியாவிடம் முத்தலாக் கூறினார் நஹிம். இதையடுத்து மனைவியை வீட்டில் உள்ள ஒரு அறையில் உணவு, நீரின்றி அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி ரஸியா பலியாகிவிட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மெஹபூபாவில் சப்பாத்தியை தீய வைத்து விட்டதற்காக மனைவிக்கு முத்தலாக் கூறி வீட்டை விட்டு துரத்திய சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.