உபேர் டாக்சி சேவைக்கு டெல்லியில் தடை- டாக்சியில் பெண் பயணி பலாத்காரம் செய்யப்பட்டதன் எதிரொலி!
டெல்லி: உபேர் கால் டாக்சி சேவைக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தநிறுவனத்தின் டாக்சியில் பயணம் செய்த பெண்ணை அதன் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையாக மிரட்டலும் விடுத்த செயல் எதிரொலியாக டெல்லி போக்குவரத்துத் துறை இந்தத் தடையை விதித்துள்ளது.
மேலும் இந்த டாக்சி நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்க்கவும் போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட டிரைவர் ஏற்கனவே ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்து கைதாகி சிறையிலும் இருந்தவர் ஆவார். ஆனால் இவரது குற்றப் பின்னணி குறித்து அறியாமல், விசாரிக்காமல் அவரை வேலைக்குச் சேர்த்துள்ளது உபேர் நிறுவனம். இதனால் இந்த நிறுவனமும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில்தான் இந்த நிறுவனத்தின் சேவையை டெல்லியில் தடை செய்துள்ளது அரசு. மேலும் இந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில்சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் டெல்லியில் இந்த நிறுவனம் முழுமையாக இயங்க முடியாத அளவுக்கு தடை செய்யப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படும் டாக்சி நிறுவனம் உபேர் என்பது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளிலும் இதன் சேவை உள்ளது.
டெல்லி போக்குவரத்து துறை சிறப்பு ஆணையர் குல்தீப் சிங் கங்கர் இதுகுறித்துக் கூறுகையில், டிரைவர் செய்த கடும் குற்றம் மற்றும் விதி மீறலைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தின் சேவையை டெல்லியில் முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் உபேர் நிறுவனத்தின் இணையதளம் மூலமான சேவைகளையும் தடை செய்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து உபேர் தரப்பி்ல இதுவரை கருத்து தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, இந்த பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள டிரைவர் சிவக்குமார் யாதவ் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து கோர்ட் உத்தரவிட்டது. யாதவ், 3 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல டாக்சி டிரைவராக இருந்தபோது தனது காரில் பயணம் செய்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிக் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உபேர் நிறுவன்ம் சரியான முறையில் விசாரிக்காமல் டிரைவரை வேலைக்கு வைத்தது தொடர்பாக அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் டெல்லி காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவை முடிவு செய்துள்ளன.. ஆனால், மற்ற நாடுகளில் உள்ளதைப் போலத்தான் தங்களது நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவில் சட்டம் சரியில்லை என்றும் உபேர் நிறுவனம் கூறுகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசுத் தரப்பில் தாங்கள் தொடர்பு கொண்டுள்ளதாகவும் உபேர் கூறியுள்ளது.
உபேர் சிஇஓ விளக்கம்:
இதுகுறித்து உபேர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிராவிஸ் கலானிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் நடந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானது, கொடுமையானது. இது தொடர்பாக காவல்துறைக்கும், அரசுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். தவறு செய்தவரை தண்டிப்பதில் துணை நிற்போம்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எங்களது நிறுவனத்தின் அத்தனை இதயங்களும் துணை நிற்கின்றன. அவருக்கு நியாயம் கிடைக்கத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம். இந்த துயரத்திலிருந்து அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மீண்டு வர துணை நிற்போம்.
மேலும், தற்போது இந்தியாவில் வணிகப் போக்குவரத்திற்கான லைசென்ஸ் பரிசோதனை உள்ளிட்டவற்றில் தெளிவான விதிகள் இல்லை. இதுகுறித்து அரசுடன் நாங்கள் பேசுவோம். பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட்டு வரும் குழுக்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து நடவடிக்கை எடுப்போம்.
மேலும் டெல்லியில் பெண்கள் பாதுகாப்புடன் பயணிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார் டிராவிஸ்.