சத்தம் போட்டால் காரிலேயே பலாத்காரம்.. பெண் பயணியை மிரட்டிய உபேர் டிரைவர் அதிரடி கைது
கொல்கத்தா: பெண் பயணியை பார்த்து பலாத்காரம் செய்துவிடுவதாக மிரட்டிய உபேர் கார் டிரைவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவின், சால்ட் லேக் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் உபேர் நிறுவன வாடகை கார் ஒன்றை கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் வாடகைக்கு எடுத்தார். தனது நண்பருடன் அதில் பயணித்துள்ளார். காரை சந்து பர்மேனிக் (28) என்பவர் ஓட்டியுள்ளார். அந்த இளம் பெண்ணின் நண்பர் ஆரண்ய பவன் பகுதியில் இறங்கி உள்ளார்.
இதன்பிறகுதான், டிரைவர் நடவடிக்கையில் மாறுபாடு தென்பட்டுள்ளது. மெயின் ரோட்டை தவிர்த்து பக்கவாட்டு சாலையில் காரை வேகமாக ஓட்ட தொடங்கியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அச்சமடைந்த பெண், மெயின் ரோட்டில் வண்டியை ஓட்டுமாறு கூறியுள்ளார்.
இதையேற்று சிறிது தூரம் மெயின் ரோட்டில் காரை ஓட்டிய டிரைவர் மீண்டும், இடதுபுறம் திரும்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் டிரைவரிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் டிரைவரோ இந்த வழியே சென்றால் நேரம் குறையும் என பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில், கோபமுற்ற ஓட்டுனர், இனி நீ பேசினால் இதே இடத்தில் உன்னை பலாத்காரம் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன அந்த இளம்பெண் காரின் ஜன்னல் கண்ணாடியை கீழிறக்கி கூச்சல் இட்டுள்ளார். ஆனால் அந்த சாலையில் ஆட்கள் யாரும் இல்லை. தனியாக இருப்பதை உணர்ந்த இளம்பெண், காரில் இருந்து குதிக்க முடிவு செய்து உள்ளார். இதனை கவனித்த ஓட்டுனர் அந்த பெண்ணை சீட்டில் தள்ளியுள்ளார். அவரை பிடித்து கொள்ள முயற்சித்துள்ளார்.
அதற்குள் கார் கதவை திறந்து இளம்பெண் வெளியே குதித்துள்ளார். நடைபாதையில் ஏறி தப்பித்த இளம்பெண் மறுநாள் உபேர் டிரைவர் மீது பீத்தன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து டிரைவரை பட்டுலி பகுதியில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். ஓட்டுனருக்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.