பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உபேர் டாக்ஸி டிரைவர் கைது... கொல்கத்தாவில்!
கொல்கத்தா: பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உபேர் கால் டாக்ஸி டிரைவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்றிரவு சர்வே பார்க் பகுதியில் இருந்து, காமாக் தெரு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக உபேர் கால் டாக்ஸியில் ஏறியுள்ளார் அப்பெண். அவர் ஆங்கில தினசரி ஒன்றின் பெண் செய்தியாளர் ஆவார்.
கால் டாக்ஸியில் ஏறிய சிறிது நேரத்திலேயே அப்பெண்ணிடம் தகாத முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார் டிரைவர் முகம்மது குர்பான். தகாத வார்த்தைகளால் பெண் பயணியை திட்டிய டிரைவர், அவரிடம் அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக அப்பெண் கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உபேர் டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உபேர் கால் டாக்ஸி டிரைவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த டிரைவர் உடல் ரீதியாக பெண் செய்தியாளரிடம் தவறாக நடக்கவில்லை. அதேசமயம், வார்த்தையால் அநாகரீகமாக நடந்து கொண்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.